முதுமையில் இயலாமை

‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’

என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார். அப்போதுதான் அவர் அவ்வாறு சொன்னார்.
அவரது வயது 85 தான்.
இந்த வயதிலும் அவரால் மற்றவர் உதவியின்றி கதிரையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் முடிகிறது.
மாறாக அதே நாளிலில் என்னிடம் வந்திருந்த மற்றொரு பெண்மணியை அவளது மகன் கைபிடித்து அணைத்து நடத்திக் கொண்டு வந்திருந்தார். உட்காருவதற்கும் எழுந்திருப்பதற்கும் அவளால் முடியவில்லை. முழுக்க முழுக்க மகனிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இத்தனைக்கும் அவளது வயது 62 மட்டுமே.
முதுமையில் இயலாமை ஏற்படுவது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான். அதே நேரம் முதுமை என்பதை வருடங்களால் மட்டும் கணிக்க முடியாது. அதனால்தான் 85 வயதில் அவரால் சுயமாக இயங்கவும், 65 வயதில் அவள் மற்றவர்களில் தங்கியிருக்கவும் நேர்கிறது.

இருந்த போதும் இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. 85 வயதில் பெண் திடகாத்திரமாகவும் 65 வயதில் ஆண் சோர்ந்து கிடக்கவும் நேரலாம்.
அதே நேரம் வயது காரணமில்லை என்பதையும் முற்கூறிய உதாரணத் திலிருந்து புரிந்து கொள்ள முடியும்
வயது என்பது வாழ்கின்ற காலத்தை வருடங்களில் கணிக்கிற ஒரு முறை மட்டுமே. ஆனால் முதுமையும் நொய்ம்மைமையும் வயதினால் மட்டும் ஏற்படுகின்றவை அல்ல.
முதுமையில் ஏற்படும் அத்தகைய தளர்சியை, ஒரு நோய்க் குறியாக இப்பொழுது மருத்துவத்தில் அடையாளம் காண்கிறார்கள். முதுமையில் ஏற்படும் இத் தளர்ச்சியை பலவீனம், இயலாமை, நொய்ம்மை என பல்வேறு பதங்களால் அழைக்க முடியும் ஆங்கிலத்தில் குசயடைவல என்கிறார்கள்.
நொய்ம்மை
ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நொய்ம்மை அடைந்துள்ளார் என்பதை எவராலும் சொல்ல முடியும். ஒருவர் எவ்வாறு நடந்து வருகிறார். திடமாக நடக்கிறாரா. மெதுவாக அடியெடுத்து வருகிறாரா, தள்ளாட்டம் இருக்கறதா. மிக மெதுவாக நடக்கிறாரா, கத்pரையில் எவ்வாறு இருக்கிறார், இருக்கவும் எழுந்திருக்கவும் சிரமம் படுகிறாரா. பேச்சு எவ்வாறு இருக்கிறது போன்ற பலவற்றை வைத்து எம்மை அறியாமலே ஒருவரது நிலமையை கணித்துக் கொள்கிறோம்.

ஆயினும் மருத்துவத்தில் அவ்வாறு எழுந்தமாட்டில் சொல்ல முடியாது. சில சுட்டிகளை வைத்தே கணித்தறிந்து தெளிவாகச் சொல்ல முடியும்.
கைகளால் ஒன்றைப் பற்றும் போது உள்ள உறுதித்தன்மை தளர்தல், எல்லா விதச் செயற்பாடுகளிலும் ஆற்றல் குறைதல், நடையின் வேகம் குறைந்து போதல், உடற் செயற்பாடுகள் குறைந்து போதல், காரணமின்றி எடை குறைதல் ஆகியவற்றை நொய்ம்மைக்கான சுட்டிகளாகக் குறிப்பிடலாம்.
நொய்ம்மையால் பாதிக்கபட்டவர்களது கை கால் அசைவியக்கம் விரை வானதாக இருக்காது. மிக மெதுவாகவே கை கால்களை அசைக்கவும் செயற்படுத்தவும் முடியும். அனிச்சையான செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே இயங்கும்.

உதாரணமாக தசைத் தொகுதியானது நலிவடையத் தொடங்கியிருந்தால் அதைத் தடுப்பதற்கான சுலபமான சில பயிற்சிகளை செய்வது நன்மை பயக்கும். தசைகளை நீட்டி மடக்கும் சிறிய சிறிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் தசைகளை வலுப்படுத்தலாம்.

எலும்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அவற்றைத் தடுப்பதற்கான விற்றமின் டி, கல்சியம் போன்ற மருந்துகள் உதவக் கூடும். அத்துடன் மேற் கூறியவாறு பயிற்சிகள் செய்வதும் அவசியமாகும். ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ் போன்ற மூட்டு வாத நோய்கள் இருந்தால் அவற்றிக்கான சிகிச்சைகளை சரியான முறையில் தொடர வேண்டும்.
இவற்றைத் தவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இரத்த சோகை, இருதய நோய்கள், சுவாச நோய்கள் போன்றவையும் நொய்மைக்கு காரணமாகலாம். சில சாதாரண பரிசோதனைகள் மூலம் அவற்றைக் கண்டறிய முடியும். அவற்றிற்கான சிகிச்சைகளை உரிய மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்காக செய்ய வேண்டும்.
இருந்த போதும் பல நோயாளிகளை அவர்கள் தீவிரமான நொய்ம்மை நிலைக்கு சென்ற பின்னரே காண முடிகிறது. அந்த நிலைக்கு சென்ற வர்களுக்கு சடுதியான ஆபத்துகள் ஏற்படாமல் காப்பதே முக்கியமானது. முக்கியமாக அவர்கள் விழுந்து விடுவதைத் தடுக்க வேண்டும்.

‘முடியாமல் கிடக்கிற இவர் பேசாமல் கிடவாமல் அங்கினை இங்கினை தட்டுத் தடுமாறி நடந்து திரிஞ்சு விழுகிறார். சும்மா கிடவுங்கோ என்றால் கேக்கிறாரே’ என்பதுதான் பல பிள்ளைகளின் குற்றச் சாட்டாக இருக்கிறது.
பேசாமல் கிடந்தால் நொய்ம்மை இன்னும் தீவிரமடையவே செய்யும். செயற்பட்டுக் கொண்டே இருப்பதுதான் உடலை நலிவடையாமல் காப்பாற்றும். நடமாடுவதும் மற்றவர்களுடன் ஊடாடுவதும் அவர்களது மன மற்றும் உடல் நிலைகள் மேலும் மோசமடையமல் தடுத்து உற்சாகமாக இயங்க வைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே அவர்கள் விழாமல் நடப்பதற்கு உதவியான உபகரணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். கைத் தடிகள், வோக்கேர்ஸ் போன்றவை நிறையவே உதவும்.இவை எல்லாவற்றையும் விட வருமுன் காப்பதே சிறப்பாகதாகும். நொட்டு நொறுக்கு உணவுகளைத் தவிர்த்து போசாக்கான உணவுகளை உண்பதும், நாளாந்தம் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதும் பெரும்பாலான நோய்களிலிருந்து எம்மைக் காப்பதுடன் முதுமையில் நொய்ம்மை ஆட்படாமல் ஆரோக்கியமாக இயங்கவும் வழி செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

-டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

828 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *