நடனக்கலையை இலவசமாகக் கற்பித்த பெரும்தகை தயாநிதி மோகன்!

மணிவிழாக்காணும் நாட்டியகலாசிகாமணி ஆசிரியை தயாநிதி மோகன். BA

எம்மவர்க்கெல்லாம் நடனக்கலையை இலவசமாகக் கற்பித்தவரும்… யாவரினதும் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து நிற்கும் ஆசிரியப் பெருந்தகையுமான அன்பிற்கும் மதிப்பிற்குரிய திருமதி. தயாநிதி மோகன் அவர்களின் 60 ஆவது அகவை நாளான இன்று…. வாழ்த்துக்களை நவில்வதில் மாணவர்களாகிய நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்தினை ஏற்றம் பெற வைத்த பெருமைமிகு அதிபர், மு.க.சுப்பிரமணியம், ஆசிரியை செ. சுப்பிரமணியம் அவர்கள் தம் புதல்வியான இவர், அவர்களது வழிகாட்டலில் இந்தியா சென்று பரதக்கலையைக் கற்று குரும்பசிட்டிக்கும்; பெருமை சேர்த்தவர்.
சிறுவயதில் கலையரசி பத்மினி சின்னத்துரையிடம் பரதம் பயின்று, பின் தமிழ்நாடு சென்று முதுபெரும் பரத ஆசான் பத்மசிறி வழுவூர் இராமையா பிள்ளை அவர்களிடமும் அவர்மகன் சாம்ராஜ் இடமும் கற்று (Dip. ) பயிற்சி பெற்று நாட்டியகலாசிகாமணி பட்டம் பெற்றிருந்தார். அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமானிப்பட்டம் பெற்றவர் (BA )
.
இளவயதிலேயே பண்ணிசைமாமணி தேர்வில் சித்திபெற்ற இவர்இ சங்கீதத்தை எம்மூரவர் நெஞ்சில் நிறைந்த சங்கீதஇ நடன ஆசான் திரு. ய. தொம்மைக்குட்டி ஆசிரியர் அவர்களிடமும் பின்னர் சென்னையில் இருந்த காலத்தில் மயிலாப்பூர் சங்கீதமணி எம். ஏ. கிருஸ்ணன் அவர்களிடமும் பயின்று சங்கீதரத்தினம் என்ற பட்டத்தினையும் பெற்றவர்.
09.12.1978 வீரசிங்க மண்டபத்தில் அன்று கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையிலும் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த திரு. அ. அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் இவரது அரங்கேற்றம் சிறப்பாக அரங்கேறி இருந்ததாம். அரங்கேற்றங்களில் பெரும்பாலும் தெலுங்கு உருப்படிகளே இடம் பெறுவது வழமையாக இருந்த காலத்தில் அதற்கு மாறாக முழுக்க முழுக்க தமிழிலமைந்த உருப்படிகள் அரங்கேற்றத்தில் அரங்கேறியமை ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர்இ 84 களில் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் நாம் கற்ற காலப் பகுதியில் நடன ஆசிரியராகக் கடமையாற்றியவர். பின் இடம்பெயர்ந்து கொழும்பு சென்ற இவர் இரத்மலானை இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருதினையும் பெற்றுமிருந்தார்.
அன்பினுருவாக விளங்கும் இவரை கற்கும் காலத்தில்இ மாணவர்கள் நாம் ஆசிரிய உறவு மறந்து ‘தயாக்கா’என்றே அழைப்பது தனி ஒரு மகிழ்வே! கடவுள் பக்தி மிக்க இவர்இ ஆன்மீகத் தொண்டையும் தன்வாழ்வின் ஓர் அங்கமாகக் கொண்டு பயணிப்பவர். எளிமையை அவரிடமிருந்தே கற்றோம்! கலைகலைக்காகவே என்ற தூரநோக்கோடு வாழும் இவரை மணிவிழா கலையரசியாக வாழ்த்துவதில் அவர்தம் மாணவர்கள் நாம் மகிழ்வும் நெகிழ்வும் அடைகின்றோம்.
இவர் வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சிவகுமாரன் அவர்களின் தங்கை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

— -அஞ்சலா பிரபாகரன்-சுவிஸ்

1,218 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *