காய்ச்சல்

னுச. வு. கோபிசங்கர்
யாழ்ப்பாணம் .

உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது, lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸ{க்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு தொட்டுப் பாக்க வடிவாத் தெரியேல்லை. ஓடிப்போய் முந்தி ஒரு டொக்டரிட்டை காட்டி தந்த prescription ஐக் காட்டி pharmacy யில மருந்தை எடுத்துப் போட்டு வீட்டை வந்தன். வீட்டை வந்து சாப்பாடுக்கு எந்தக் கடை menu விலயாவது முருங்கைக்காய் கறி , மீன் தீயல், துவரம்பருப்பு ரசம் இருக்கா எண்டு தேடீக் களைச்சுப் போய் , Uber- eats இல soupஐ ஓடர் பண்ணீட்டு இப்போதைக்கு பிளேன்ரீயும் பிஸ்கட்டாலேம் வயித்தை நிரப்பீட்டு இருந்தன்.

வாங்கின Antibiotics>vitamin எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு இருக்க நித்திரை தூக்கி அடிக்க போத்திப் படுத்தன். “பேசாம மூடிக்கொண்டு படு..வேர்த்தாத்தான் காயச்சல் விடும்” எண்டு சொல்லீட்டு அம்மா vicksஐ நெஞ்சிலேம் தொண்டையிலேம் பூசீட்டு மூக்கில டப்பியை மணக்கப் பிடிக்க ஆழமா மூச்சை எடுத்திட்டு அப்பிடியே போத்துப் படுத்தன். அரை நித்திரையில அனுங்கி முழிக்க அம்மா நெத்தீல ஓடிக்கலோன் நனைச்ச துணியை வைச்ச படி கட்டிலுக்குப் பக்கத்திலயே இருந்தா. இந்தா பனடோலைக்குடி எண்டு தந்திட்டு அடுத்தது விடிய நாலு மணிக்குத்தான் இப்ப படு எண்டு சொல்லீட்டு தேவாரம் பாடத் தொடங்கினா.

விடிஞ்சது தெரியாம பிந்தி எழும்பி வர “ அப்பவும் சொன்னான் மழைக்க நனையாத எண்டு , இப்ப பார் கசக்காரன் மாதிரி இரவிரவா இருமிறாய்” இந்தா இதைக்குடி எண்டு அப்பாச்சி பாலுக்க உழுத்தம்மாவை கரைச்சுக் கொண்டு வந்தா. குடிச்சு முடிய நெத்தீலேம் நெஞ்சிலேம் கையை வைச்சிட்டு மேல் சுடூது சட்டையைப் போடு எண்டு அதட்டீட்டு , இவனை இண்டைக்கு பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டாம் எண்டு சொல்ல அண்ணா தான் மட்டும் போகப் போறன் இவன் வீட்டை நிக்கப் போறான் எண்ட பொறமையோடையும் எனக்கும் காய்ச்சல் வரேல்லையே எண்ட ஏக்கத்தோடையும் போனார்.

சும்மா நாளில பள்ளிக்கூடம் போகாம நிண்டா ஒண்டு படிக்கோணும் இல்லாட்டி ஏதாவது வேலை செய்யோணும் , ஆனால் காய்ச்சல், பள்ளிக்கூடம் cut, மழை இப்பிடி ஒரு combination கிடைச்சா ராஐயோகம் தான். காலமை இஞ்சியைச் சுட்டு வைக்கிற சம்பல், இடியப்பம் சொதியோட “வேண்டாம் வேண்டாம்” எண்ட அம்மா தீத்தினா.

பத்து மணிக்கு மல்லித்தண்ணியோட தோசைக்கல்லில வாட்டின பாண்துண்டு, பிறகு தேசிக்காய்த் தண்ணி. மத்தியானத்துக்கு முட்டைப் பொரியலும், விளைமீன் தீயலும், நாலு மணிக்கு இருக்கிற முழு மிச்சப் பாலும் எனக்கு மட்டும் தேத்தண்ணி; ஆகிச்சுது. அதோட கடிக்க பணிஸ், கிறீம் கிரக்கர் எண்டு ஏதாவது மாறி மாறி வந்திச்சுது . அடிக்கடி வந்து எல்லாரும் தொட்டுப் பாத்து காயுதா காயேல்லையா எண்டு கண்டு பிடிச்சு பனடோல் தந்திச்சினம். அதோட போத்தில் திருப்பித் தாறம் தம்பிக்கு காய்ச்சல் எண்டு சந்திக் கடையில அண்ணா வாங்கின orange barley ரெண்டு பேருக்கும் கிடைச்சுது. மரத்து முருங்கைக்காயோட வந்த பக்கத்து வீட்டு அன்ரி வேற ஏதும் வேணுமே எண்டு கேட்டிட்டுப் போனா.

காய்ச்சல் வந்தா வீட்டை ராசா தான், எல்லாரும் விழுந்து விழுந்து கவனிப்பினம். அதோட எல்லாரையும் அதை எடுத்துத் தா இதைத் தா எண்டு வேலையும் வாங்கலாம். ஆனா ஒண்டு வீட்டை ஆருக்காவது வருத்தம் வந்தா எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்.“அவன் காய்ச்சல் காரன் பாத்துக்கொண்டிருக்க நீ சாப்பிடிறதே” எண்ட அறிக்கையோட எல்லாரும் அடங்கீடுவினம். மூண்டாம் நாள் இருமல் கூடி சளியா மாற தூதுவளையும் மல்லியும் போட்டுக் காச்சின கசாயம் சூடா இருந்த புட்டுப் பானைக்கை தேயிலைச்சக்கை, தேசிக்காயத் தோல், eucalyptus இலையையும் எண்டு எல்லாத்தையும் போட்டு கலைச்ச ஆவியை முகத்தை துவாயால மூடி முழுசா மூக்கால இழுத்துப் பிடிச்சன்.

கடைசீல ஐஞ்சு நாளில காய்ச்சல் மாறிச்சுது. காய்ச்சல் மாறி ரெண்டாம் நாள் சுடுதண்ணி வைச்சுத் தோய வாத்து , மீனுக்குப் பதிலா இறைச்சி காய்ச்சித்தந்து கொஞ்சம் வீட்டுக்க விளையாட விட்டிச்சினம். மூண்டாம் நாள் பச்சைத் தண்ணீல குளிக்க விட்டுப் பாத்து ஒண்டும் இல்லை எண்ட பிறகு தான் பள்ளிக்கூடம் போக விட்டிச்சினம்.

“கோழி ஒரு மாதிரி கொக்கரிக்குது போய்ப்பார்” எண்டு ஆச்சி சொல்ல போய்ப் பாத்தன். உமிச் சட்டிக்கு மேல இருந்த கோழியை தூக்கி எறிஞ்சிட்டு முட்டையைத் தூக்க அது சூடா இருந்திச்சுது.இருமல் மாறாதால வந்த வினை இது, காலமை வெள்ளன வெறும் வயித்தில பச்சை முட்டை குடு இவனுக்கு எண்டு ஆரோ அம்மாக்கும் கோழிக்கும் சொன்னதால காலமை முட்டையோட தான் நாள் தொடங்கும்.

முட்டை நுனியை கரண்டியால தட்டி உடைச்சு எடுத்து எறிஞ்சிட்டு, மேல இருக்கிற வெடுக்கை முன் தென்னை மரத்தில புடுங்கின ஈக்கிலால எடுத்து எறிஞ்சிட்டு, ரெண்டு விரலால எடுத்துப் போட்ட மிளகையும் உப்பையும் ஈக்கிலால கலக்கீட்டு இப்பிடியே குடி எண்டு தந்தா அம்மம்மா. குடிக்க முதலே நான் ஓங்காளிக்க “அப்பிடியே தொண்டைக்குள்ள விடிறன் விழுங்கு” எண்டு சொல்லக் கண்ணை மூடிக்கொண்டு குடிச்சிட்டுப் போனன். பின்னேரத் தேத்தண்ணி போய் வேர்க்கொம்பு கோப்பி வந்திச்சுது.

பத்தாத்துக்கு ஆட்டுப்பால் தான் நல்லம் எண்டு ஒரு ஊர்ப் பரியாரி சொல்ல அடுத்த நாளே ஆட்டுக்குட்டி வீட்டுப் பத்தீல நிண்டிச்சுது. “ஆசுபத்திரி வாசலும் பொலிஸ் ஸ்டேசன் வாசலும் ஒரு நாளும் ஏறக்கூடாது” எண்டு ஆச்சி சொல்லிறதால எப்பிடியாவது கை வைத்தியத்தால இருமலை மாத்திற முயற்சீல இலை, குழை, தழை எண்டு சாப்பிடத் தந்திச்சினம். எங்கடை சந்தீல இருந்த சிவராமலிங்கம் apothecary பாவம் ஒரு நாளும் எங்களால வருமானம் இல்லை. அவரே ரெண்டு பாணி மருந்தும் பனடோலும் தான் வைச்சிருந்தவர், இருந்தாலும் அதைக் கூட வாங்க போறாக்கள் கொஞ்சப்பேர் தான் , மற்றவை எல்லாம் வீட்டு வைத்தியம் தான்.

காய்ச்சல் மாறி, குளிச்சு, தோஞ்சு, இறைச்சி சாப்பிட்டு கடைசீல, “ please excuse my absence as I was suffering from fever” எண்ட கடிதத்தோட பள்ளிக்கூடம் போக வாற கிழமை term test எண்டு சொல்ல இப்ப exam காய்ச்சல் தொடங்கிச்சுது. இவ்வளவு நாளும் இருந்து கொண்டு வேலை வாங்கின என்னை மேசையில இருத்தி வைச்சு வாங்கிச்சினம் எல்லாரும். திடீரெண்டு calling bell அடிக்கிற சத்தம் கேட்டு அட பள்ளிக்கூடம் போக alaram அடிக்குது எண்டு எழும்பிப் போய் பாத்தா uber காரன் நிண்டான். கனவு போய் காய்ச்சல் மட்டும் நிண்டிச்சுது.

639 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *