வெற்றிமணி யின் 325 இதழுக்கு அகரம் த. இரவீந்திரன் அவர்கள் கௌரவ ஆசிரியர் கௌரவம் பெறுகின்றார்.

வெற்றிமணி பத்திரிகை இன்று தனது 325 வது இதழை விரிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பெண்கள் தினம் (பங்குனி 08)வரும் வேளை, ஒரு சாதனைப் பெண்ணை அந்த மாதத்தின் வெற்றிமணி யின் கௌரவ ஆசிரியராக நியமித்து, கௌரவிப்பது, வழக்கம். ஆனால் 29 வருடங்களில், எந்த ஒரு ஆணையும் இப்படிக் கௌரவம் செய்தது இல்லை.

ஆனால் வெற்றிமணி தனது 325 வது இதழ் ஒலிக்கும் வேளை தன் துறையோடு பயணிக்கும் ஒரு சாதனையாளரை கௌரவ ஆசிரியராக ஐப்பசி மாதம் கெரவிக்க முடிவு செய்தது.

அப்போது கண்முன்னே தெரிந்தவர் அகரம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. த. இரவீந்திரன் அவர்கள். 2019 ஆண்டு வெற்றிமணி வெள்ளிவிழா போது திரு ரவீந்திரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது யாவரும் அறிந்ததே.

இன்று ஐப்பசி மாத இதழுக்கு கௌரவ ஆசிரியராக கௌரவிக்க வெற்றிமணி பத்திரிகை திரு த.ரவீந்திரன் அவர்களை தெரிவு செய்கிறது. தெரிவு செய்யக் காரணம் இவைதான்.

நான்தான் முதல் செய்தேன் என்பது ஒருவரது சிந்தனையின் சிறப்பு என்றால், அதனை எவ்வளவுகாலம் தொடர்ந்து செய்தேன், செய்கின்றேன் என்பது எவரும் சிந்திக்க முடியாத, பல சோதனைகளைக், கடந்தவர்களது பெரும் சிறப்பு என்பது, வெற்றிமணியின் கணிப்பு. அந்தவகையில், அகரம் சஞ்சிகையை 13 ஆண்டுகளாக தொடர்ந்து மாதம் மாதம் வெளியிடுவது என்பது சாதாரண விடையம் அல்ல. முக்கியமாக நாம் அச்சில் வெளிவரும் சஞ்சிகைகள் பற்றியே பார்க்கின்றோம், அதற்கான பொருட்கள் செலவு,முக்கியமானது, மின்னிதழ்கள் மின்னுவதற்கும், அச்சில் ஒரு ஊடகம் வருவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அச்சில் வெளிவரும் ஊடகங்களுக்குப் பின்னால் பல சுமைகளைச் சுமதந்தாக வேண்டும்.

வியாபார ஸ்தாபனங்கள் கைகொடுக்கின்றன என்பது மறுப்பதற்கு இல்லை, ஆனால் அவற்றை செயற்படுத்தி பலன் பெற உழைப்பு அவசியம். இது எல்லோரும் செய்துவிட முடியாது. வெற்றிமணியின் முதல் வெற்றி அதன் வடிவமைப்பு. இதனை கணனியின் தொழில் நுட்பம் குறைந்த 1994 ஆண்டிலேயே நிரூபித்த பத்திரிகை,வெற்றிமணி. இன்றுவரை 29 வருடங்கள் அதனை தக்கவைக்கும் நிலையில் உள்ளது. அப்படியான ஒரு பத்திரிகை வேறு ஒரு சஞ்சிகையை சிறப்பாக நோக்கியது என்றால் அகரம் சஞ்சிகையின் நேர்த்தியான வடிவமைப்பும் ஒரு காரணமாகின்றது. உழைப்பு நேர்த்தி, இவற்றை நீண்டகாலம், தனது துறையில் கடைப்பிடிக்கும் திரு ரவீந்திரன் அவர்களை வெற்றிமணி யின் 325 வது இதழான ஐப்பசி மாதம் இதழுக்கு கௌர ஆசிரியராக கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இவரது ஏனைய பணிகள்.

19வருடங்களாக நுவுசுவானொலியை தொடர்ந்து நடத்தல்,9 வருடங்களாக,அகரதீபம் ஆன்மிக சஞ்சிகை வெளியிடுதல், அத்துடன் நாடகம்,குறும்படம்,பட்டிமன்றம் என பல துறைகளிலும் கால் பதித்தவர் என்னும் சிறப்புக்கு உரியவர்.

என்றும் தமிழுடன்
மு.க.சு.சிவகுமாரன்
பிரதம ஆசிரியர்
வெற்றிமணி பத்திரிகை யேர்மனி

540 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *