இலண்டன் ‘நரக’காவலர்கள்!

ஒரு சிலரது நடத்தையால் நரகமாவதா! நகரக் காவல்துறை!

நாட்டையும் சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் உள்ள காவலர்கள் அத்துமீறி மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்துவதும் பொய்க்குற்றச்சாட்டுக்களை போட்டு அப்பாவிகளை உள்ளே அடைப்பதும் தமிழகத்தில் வழக்கம் என்று படித்திருக்கிறோம். படங்களிலும் பார்த்திருக்கின்றோம்‘விசாரணை’ ‘காவல்துறை உங்கள் நண்பன்’ ‘ஜெய்பீம் ’ ஆகிய திரைப்படங்கள் இந்தக்கருத்தை விரிவாக காட்டின. உலகின் பல நாடுகளிலும் காணப்பட்ட இந்த பொலிஸ் அராஜகம்,அத்துமீறல் இங்கு பிரிட்டனில் நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் தலை விரி கோலமாக காட்சி தந்து பொதுமக்களையும் செய்தி ஊடகங்களையும் திகைக்க வைத்திருக்கின்றது.

இந்த இரண்டு சம்பவங்களில் கோரமான சம்பவம் 48வயதான வேன் கசின்ஸ்…..என்ற ஒரு காவல் துறை அதிகாரி, இருட்டு நேரத்தில் சேரா, என்ற ஒரு அழகிய 38 வயது யுவதியை வழிமறித்து தன் பொலிஸ் அடையாள அட்டையைக் காட்டி ‘கொவிட் ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக நான் உங்களை கைது செய்கிறேன்’ என்று கூறி கைகளில் விலங்கு மாட்டி தன் காரில் ஏற்றி இலண்டனிலிருந்து பல மைல் தூரம் ஓடிச்சென்று ஒதுக்குப் புறமான இடத்தில் காரை நிறுத்தி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவள் உயிரைப் பறித்து சடலத்தை எரித்து அண்மையில் இருந்த குளத்தில் வீசியிருக்கிறார்.

சேராவின் கைத்தொலைபேசியும் பொலிஸ் கொலையாளியால் குளத்தில் வீசப்பட்டது. மார்ச் மாதம் 9ஆம் திகதி CCTV கெமராக்கள் மூலம் பொலிஸ் கொலையாளி கசின்ஸை அடையாளம் கண்ட ஆய்வாளர்கள் இரவு எட்டு மணியளவில் அவரது வீட்டில் வைத்து கொலையாளியை கைது செய்தனர். தனது வீட்டிலிருந்து தனது கைத்தொலைபேசியிருந்த தகவல்களை அழித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

சேரா என்ற யுவதியை கடத்திய குற்றத்திகாக மட்டுமே …மார்ச் 9ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். ‘சேராவைக் காணோம் ’ என்ற விஷயத்தை மட்டுமே விசாரித்த ஆய்வாளர்களின் காதுகளில் காமுகன் கசின்ஸ் பூ வைக்க முற்பட்டான். புங்குடுதீவு வித்யா வழக்கில் தெரிவிக்கப்பட்டது போல பெரிய புளுகுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டான். கிழக்கு ஐரோப்பிய வட்டாரத்திலிருந்து பிரிட்டனுக்குள் வந்த ரவுடிகள் சிலர், தமக்கு ஒரு பெண்ணை விற்கும்படி கேட்டதாகவும் தனக்கு அந்த நேரத்தில் நிதி நெருக்கடி இருந்ததால் தானும் அதற்கு சம்மதித்து சேராவை கடத்தி அவர்களிடம் அனுப்பியதாகவும் காமுகன் கசின்ஸ் கதையளந்தான்

மறுநாள் சேராவின் சடலத்தின் எரியாத துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவனது கதை வெறும் கட்டுக்கதை என்பதை அறிந்த பொலிஸார், கசின்ஸை 11 ஆம் திகதி மீண்டும் கொலைக்குற்றத்திற்காக கைது செய்தனர். ஜூலை 9ஆம் திகதி நீதிமன்றதிற்கு கொண்டு செல்லப்படாமல் சிறையில் இருந்தவாறே கசின்ஸை நீதிபதி விசாரித்தார். கொலைக்குற்றத்தை கசின்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி மருத்துவ மற்றும் மனநல அறிக்கைகள் பெறப்பட்ட பின் 30 ஆம் திகதி ‘பொலிஸ்காரன் என்ற மக்கள் மதிப்பையும் நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்த கசின்ஸ் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் ’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

சேரா ஒரு பொலிஸ்காரரால் அழைத்துச் செல்லப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் இலண்டனில் தனியாக செல்லும் பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரவு நேரத்தில் ஒரு ஆண் பொலிஸ் ஒரு பெண்ணை வழிமறித்து விசாரிக்கும் போது இன்னும் ஆண் அல்லது பெண் பொலிஸ_டன் மட்டுமே செல்ல வேண்டும் என்று பல விஷயங்களை உட்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் ஆராய்ந்து வருகிறார்.

WhatsApp சேவையில் பகிரக் கூடாத அந்தரங்க விஷயங்களை பொலிஸ்காரர்கள் தங்களுக்கிடையில் கசிய வைத்து பகிர்ந்து கொண்டு அதனால் பொலிஸ் மேலதிகாரிகளினால் கவனிக்கப்பட்டு அவர்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது. வட்ஸ் அப் கசிவு மோசடி இன்னொன்று பிறிதோர் கொலை வழக்கில் அம்பலத்துக்கு வந்தது. விபரங்கள் பின்வருமாறு:

இலண்டனில் வெம்பிளி என்ற இடத்தில் பிபா– ஹென்றி நிக்கோல் ஆகிய இரு யுவதிகள் ஜூன் 6ஆம் திகதி கொலையுண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சடலங்களை கொலை நடந்த இடத்தின் பாதுகாப்புக்கு பொலிஸ்காரர்கள் இருவர் JAFFER (47)இ லூயிஸ் (32) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். சடலத்தைச் சுற்றி பொலிஸ் வேலி போட்டு இவர்கள் இருவரும் வெளியே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள் இங்கே தான் இலண்டன் பள்ளிக்கூட ரவுடித்தனங்கள் தலை தூக்கின.

தாங்கள் அணிந்திருந்த சீருடையையும் மதிக்காமல் பொலிஸ் காவல் வேலியைத்தாண்டி உள்ளே போய் அந்த இரு சடலங்களையும் பல்வேறு போஸ்களில் படம் பிடித்தார்கள். இந்த அற்பத்தனமான இலண்டன் பொலிஸார் இருவரும். அத்தோடு தாங்கள் இருவரும் சடலங்களுடன் நின்று ‘செல்பி’யும் எடுத்துக்கொண்டனர். இந்தப் படங்களை தமது பெண் தோழியருக்கும் டாக்டருக்கும், பல் மருத்துவருக்கும் என தமது வட்ஸ் அப் மூலம் 42 சகாக்களுக்கு அனுப்பி வைத்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு தமது குற்றங்களை ஒத்துக்கொண்டனர். தமது பதவிகளையும் இராஜினாமாச்செய்தனர். டிசம்பர் மாதம் உங்களுக்கு பெரும்பாலும் சிறைத்தண்டனையே அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையே இந்த இரு யுவதிகளையும் கொன்ற 19 வயதான டான்யல் ஹ_சைன் ஒரு சாத்தானின் வேண்டுகோளின் படி தாம் கொன்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். புதையல் ஒன்று இருக்கும் இடத்தை நான் உனக்கு தெரிவிக்க வேண்டுமானால் நீ எனக்கு இரு இளம் யுவதிகளின் உயிர்களைக் கொடு என்று இங்கிலாந்து சாத்தான் கேட்டதாம். இந்தியாவிலும் இலங்கையிலும் அலையும் இரத்தக் காட்டேறிகள் புதையலைக் கண்டு பிடிக்க இங்கு இலண்டனிலும் உயிர்ப்பலி கேட்கின்றதாம்.

756 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *