கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான்.

“இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்”

சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை. அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்து அடிக்கடி சாத்துவார். இப்போ இந்த மந்திரத் தண்ணீர் கிடைச்சிருக்கு. இது தண்ணீர் எல்லா சிக்கலுக்கும் விடிவு என சிறுவன் நினைத்தான்.

அன்று மாலை மந்திரக் குடுவையைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஒரு செடியின் தலையில் விட்டான்.

ஜீ..பூம்…பா போல செடி கடகடவென வளரும் என நினைத்தான்… ஊஹூம் வளரவில்லை.

அடுத்த செடியில் விட்டான்…

ஊஹூம்…

அதற்கு அடுத்த செடி ?

ஒரு மாற்றமும் இல்லை.

அப்படியே கடைசிச் செடி வரை முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ரொம்ப சோகமாகிவிட்டது. மிச்சமிருந்த பாட்டில் தண்ணீரையெல்லாம் கடைசிச் செடியின் தலையில் கவிழ்த்தான். கொஞ்ச நேரம் செடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ரொம்ப சோகமும் சோர்வும் பிடித்துக் கொள்ளப் போய்ப் படுத்து தூங்கிவிட்டான்.

மறு நாள் காலை.

டேய்.. சீக்கிரம் எழும்புடா…. அப்பா உலுக்கினார்.

என்னப்பா ?

உன் தோட்டத்தைப் போய் பாரு ? என்ன பண்ணினே ?

என்னாச்சுப்பா ?

எழும்புடா போய்ப் பாரு.

சிறுவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே தோட்டத்தைப் போய்ப் பார்க்க செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்து அழகழகாய்ப் பூக்கள் பூத்திருந்தன. புது வகையான பூக்கள் !

சிறுவனுக்கு குஷி தாங்கவில்லை. ஓடிப் போய்க் கடைசிச் செடியைப் பார்த்தான். அந்தச் செடிக்குத் தான் மிச்சமிருந்த தண்ணீரையெல்லாம் ஊற்றியிருந்தான்.

அந்தச் செடி வானளாவ வளர்ந்து மேகத்துக்குள் புகுந்திருந்தது…

ஓ…வாவ்… எவ்ளோ பெருசு ? சிறுவன் ஓடிப் போய் அந்த மரத்தில் தொங்கினான். அந்தக் கிளையில் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. தகதகவென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பொன் நிறத்திலான குட்டி டிராகன் !

சரி… ஸ்கூல் வந்துச்சு… இனிமே மிச்ச கதை நாளைக்கு. வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிவிட்டு சீட் பெல்டைக் கழற்றிக் கொண்டே இடப்பக்கம் திரும்பி மகனைப் பார்த்தேன். மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, கொஞ்சம் சாம்பல் கலரில் ஒரு டவுசர். கழுத்தில் தொங்கும் டேகில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பெயர். அருகில் குட்டிப் புகைப்படத்தில் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். கீழே யூகேஜி பி. என்று பளிச் என எழுதப்பட்டிருந்தது.

டாடி… பிளீஸ்… கார்ல இருந்தே கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்….

நோ… டா செல்லம்.. இட்ஸ் லேட். நைன் ஓ க்ளாக். மிச்சம் நாளைக்கு.

ஒரு கையில் பையையும், மறுகையில் பையனையும் அள்ளிக் கொண்டு ஸ்கூல் காம்பவுண்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி கம்பீரமாய் நின்றிருந்தது. பள்ளியின் தலையில் டிரீம், டேர், டூ என வாசகங்கள். வாசலில் குட்டிக் குட்டி மழலைப் பூக்கள் ஓடியாடிக் கொண்டிருந்தன. குட் மார்ணிங் மிஸ் எனும் குரல்களுக்கிடையே ஆசிரியர்களும் ஆங்காங்கே தெரிந்தார்கள்.

எனக்கு இது தினசரிப் பழக்கம் தான். காலையில் 6.20 க்கு அலாரம் அடிக்கும். அடிக்கும் அலாரத்தை சபிப்பதில்லை. காரணம் இப்போதேனும் எழும்பாவிட்டால் எல்லாம் குளறுபடியாகிவிடுமென்பது ரொம்ப நல்லா தெரியும். ஒருபக்கம் மகள், மறுபக்கம் மகன் என ஆளுக்கொரு திசையில் அற்புதமான தூக்கத்தில் லயித்திருப்பார்கள். அழகான தூக்கத்தில் இருக்கும் ஒரு மழலையை எழுப்புவது போல ஒரு மோசமான வேலை இருக்க முடியாது. என்ன செய்ய ? இப்போ எழும்பினால் தான் மகளை 8 மணிக்கு ஸ்கூலில் கொண்டு விட முடியும். பிறகு திரும்ப வந்து பையனை 9 மணிக்கு ஸ்கூலில் கொண்டு போய் விட வேண்டும்.

வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் தான். சென்னை ஸ்பெஷல் ஏரியா ! சந்துகளைச் சந்தித்து, டிராபிக்கை அனுசரிக்க வேண்டியிருப்பதால் பத்து நிமிட கார்ப் பயணம்.

காரில் ஏறியவுடன் சீட்பெல்ட் போட்டு, ஒரு குட்டிப் பிரேயர் முடித்த கையோடு “டாடி ஸ்டோரி” என்பார்கள் இருவரும்.

ஆளுக்குத் தக்கபடி கதைகளைச் சொல்ல வேண்டும்.

மகளுக்கு பிடித்தவை தேவதைக் கதைகள். ஃபேரி டெய்ல்ஸ் அவளுடைய ஃபேவரிட். அழகழகான பூந்தோட்டங்கள், அதில் உலவும் ஃபேரி கள், அந்த ஃபேரிகளுக்கு வில்லனாய் வரும் தூரதேசத்து மோசமான சூனியக்காரி, பிறகு எப்படி அந்த ஃபேரிகள் கடைசியில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று முடியும். ஒரு ஃபேரி கதை முடிந்தபின் அடுத்த கதைக்கு டால்பின், கடல்க் கன்னி, தூரதேசத்து ராஜகுமாரி, அரச கோட்டையில் கிடந்த நீலக் கல் என ஏதோ ஒரு கதை அன்றைய காலைப் பொழுதில் உதயமாகி தானாகவே வளரும்.

பையனுக்குப் பிடித்தமானவை ஆக்‌ஷன் கதைகள். மந்திரவாதி, டிராகன், டைனோசர், சிங்கம், புலி என பரபரப்பாய் இருக்கும் கதைகள் தான் பிரியம். அப்படி இல்லாவிட்டால் கார் ரேஸ், கடல் பயணம் என அதிரடியாய் இருக்க வேண்டும். பசங்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ரசனை சின்னவயதிலேயே நிர்ணயமாகிவிடுகிறது பாருங்கள். எல்லாம் கடவுள் படைப்பின் விசித்திரம் என்றால் நாத்திகவாதிகள் அடிக்க வருவார்கள். சரி அது கிடக்கட்டும். அப்படி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி கதைகள் எப்படியோ எனது மூளையின் வலது பக்கத்தில் உதயமாகிக் கொண்டே இருக்கும்.

எந்தக் கதையையும் முன்கூட்டியே யோசிப்பதில்லை. எந்தக் கதை எப்படி துவங்கி எங்கே போய் முடியும் என்று சத்தியமாய்த் தெரியாது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. கதை எப்படி இருந்தாலும் அதைச் சொல்லும் போது ஒரு நாடகம் போல ஏற்ற இறக்கம் முக்கியம். கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் இருக்கலாம் தப்பில்லை. பிள்ளைகள் எந்த இடத்தை ரசிக்கிறார்களோ அந்த இடத்தை டெவலப் செய்து கொண்டே போக வேண்டும். எந்த இடம் அவர்களுக்குச் சுவாரஸ்யம் இல்லையோ, அந்த இடத்தைக் கட்பண்ணி கடாசவேண்டும். அந்த நுணுக்கம் தெரிந்தால் எல்லோருமே கதை சொல்லிகள் தான். என் கதைகள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். தினமும் கதை சொல்வேன். எந்த இடத்தில் நேற்று முடித்தேன் என்பதையே மறுநாள் மறந்து விடுவதும் உண்டு. ஆனால் பிள்ளைகள் மறப்பதேயில்லை.

“டாடி, அந்த டிராகனோட முதுகுல இருந்து கடல்ல குதிப்பான்ல, அதுவரைக்கும் சொன்னீங்க. அவன் குதிக்கிற இடத்துல நிறைய முதலைங்க நீந்திட்டு இருந்துச்சு…” என்று அட்சர சுத்தமாய் நினைவில் வைத்து சொல்வார்கள்.

“ஓ.. குதிச்சானா, அங்கே முதலை வேற இருந்துச்சா… ” சட்டென மூளையைக் கசக்குவேன். எனக்கு உதவ ஒரு திமிங்கலமோ, கடல்கன்னியோ, அல்லது விழும் முன் தூக்கிக் கொண்டு பறக்க ஒரு ராட்சத வெள்ளை கழுகோ வரும். அது அந்த நாளைப் பொறுத்தது !

பையனை ஸ்கூலில் அனுப்பியாகிவிட்டது. இனிமேல் அலுவலகத்தை நோக்கி 30 நிமிட டிரைவ்.

கண்ணாடிகளை ஒட்டி வைத்து சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப முயலும் ஐடி நிறுவனம் ஒன்றில் தான் வேலை. பிஸினஸ் எனேபிள்மென்ட் என ஸ்டைலாக அழைக்கும் துறையில் மேனேஜர். பேரைக் கேட்டு பயந்துடாதீங்க, கலர் கலரா பிரசன்டேஷன் பண்ணி, அதை திரையில் காட்டி கஸ்டமர்களை வசீகரிப்பது தான் வேலை. கொஞ்சம் டீசன்டா சொல்லணும்ன்னா அடுத்த கம்பெனிக்கு பிஸினஸ் போகாம நம்ம பக்கத்துக்கு இழுக்கிறது. ஓடைல ஓடற தண்ணியை இடையில வாய்க்கால் வெட்டி நம்ம வயலுக்குத் திருப்பற மாதிரி. விவசாயம் பத்தி தெரியாதவங்க, டக் ஆஃப் வார் ன்னு வேணும்ன்னா வெச்சுக்கோங்க.

கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு புராஜக்ட்க்காக மாடாய் உழைக்கிறோம். புராஜக்ட் புரபோஸல் கடைசி ஸ்டேஜ் ! கடைசி நிலைன்னு சொல்றது கஸ்டமரிடம் நமது பிரசன்டேஷனைக் கொடுத்து அவனுக்கு விளக்கிச் சொல்வது. அலுவலகத்தில் ஒவ்வொருத்தரிடமும் தகவல் கறந்து, சொல்யூஷனிங், டைமிங், காஸ்ட் அது இது என புரண்டு புரண்டு ஓடியதில் முதுகுக்கே முதுகு வலி. இன்னிக்கு நைட் கிளையன்ட் பிரசன்டேஷன். ஒரு நட்சத்திர ஹோட்டலில் கான்ஃபரன்ஸ் ஹால் புக் பண்ணியிருந்தார்கள்.

வைன் கோப்பைகளும், கோட் சூட்டுகளும் இருக்கும் அறையில் பிரசன்டேஷன் செய்வதே ஒரு பெரிய மேஜிக். கத்தியில் நடப்பது போல கவனம் வேண்டும். நாமும் கோட்டு சூட்டுக்கு மாறவேண்டியது முதல் கொடுமை ! வாடகைக்காவது ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொள்ள வேண்டியது இரண்டாவது கொடுமை. உதட்டிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடாத புன்னகையை ஆணி அடித்து வைக்க வேண்டியது மூன்றாவது கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல் கிளையண்ட் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது உலக மகா கொடுமை.

இந்த கொடுமைகளையெல்லாம் தாண்டி, இந்த பிரசன்டேஷன் வெற்றி கரமாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மேனேஜரிம் மனசிலும் அதே சிந்தனை தான்… ஸீ… ஹி..ஈஸ் காலிங்…

சார்…

இட்ஸ் லேட்… வயர் ஆர் யு ?

ஆன் மை வே… ராஜ்….. ஐ..ல் …பி …. இன் ஃபியூ மினிட்ஸ்.

சீக்கிரம் வாங்க… ஒரு ஃபைனல் ரன் துரூ தேவையிருக்கு. நீட் மோர் கிளாரிடி ஆன் ஆன்ஸர்ஸ்.

கண்டிப்பா சார்… வெச்சுடலாம்… ஒரு லெவன் ஓ கிளாக் உங்களை மீட் பண்றேன்.

ஓகே… சப்போர்ட்டிங் டாக்குமென்ட்ஸ்..

எல்லாம் ரெடி சார்…

வீ நீட் டு கட் துரோட் மேன்…. ஐ ஆம் ஆல் எக்ஸைட்டிங்…

பண்ணிடலாம் சார். ஆல் செட்…. இந்த புரபோசல் நமக்கு தான் சாதகமா இருக்கு. காஸ்ட் வைஸ் நாம மத்த கம்பெனியை விட கம்மியா இருக்கோம்ன்னு நமக்கே தெரியுது. அப்படியே அவங்க இதை விடக் கம்மியா கோட் பண்ணியிருந்தா கூட, நாம நாலெட்ஜ் டிரான்சிஸன் இலவசமா பண்ணிக் கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அது ஒரு இன்வெஸ்ட்மென்ட் நம்ம சைட்ல. அவங்களுக்கு அது ஒரு ஆடட் அட்வான்டேஜ்… எல்லாமே நல்லா தான் இருக்கு…. எந்திங் மிஸ்ஸிங் ?

நோ..நோ… யூ ஆர் ரைட்… நல்லா பிரசன்ட் பண்ணணும். தேட்ஸ் இம்பார்டன்ட்.

கண்டிப்பா சார்.

ஓகே,.. ஸீ..யூ.. இன் ஆபீஸ்.

அன்று மாலை,

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு பேர் இருந்தார்கள். ஒட்டடைக்குச்சி போல ஒருவர் கழுத்தில் டையுடன் நீளமான ஒரு கோப்பையில் வைன் வைத்திருந்தார். அவருக்கு நேர் எதிராய் ஒரு குண்டு மனிதர் பழச் சாறுடன் அமர்ந்திருந்தார். மிச்ச நபர்கள் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வை எமோஷன்ஸ் ஏதும் காட்டாத ஜேம்ஸ்பாண்ட் லுக்.

கழுத்தில் இருந்த டையை கொஞ்சமாய் அழுத்தி தலையை அசைத்துக் கொண்டே…

“ஐ ஆம் ரியலி எக்ஸைடட் டு வெல்கம் யூ ஃபார் திஸ்……” என்று பேசத் துவங்கினேன்.

தயாரித்து வைத்திருந்த பவர் பாயின்ட் பிரசன்டேஷன் திரையில் கலர்கலராய் வரைபடங்களோடு மின்னியது.

எங்களுக்கு வேலை கொடுத்தால் மூன்று ஏரியாக்களில் நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த செலவு, நிறைந்த தரம் மற்றும் சரியான நேரம். இந்த விஷயங்களை எப்படி நாங்கள் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கப் போகிறேன். அதற்காக எங்களிடம் என்னென்ன ஸ்பெஷல் திறமைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லப் போகிறேன். அதற்கு முன் எங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் வீர தீர பராக்கிரமங்களையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மென்மையான ஆங்கிலத்தில் விழுந்து விடாத புன்னகையில் பேசத் தொடங்கினேன்.

எனக்கு முன்னால் கதை கேட்க சுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் மகனின் முகம் தெரிந்தது. உள்ளுக்குள் மெல்லப் புன்னகைத்தேன். ‘டாடி.. சொல்லுங்க டாடி’ என்று அவன் சொல்வது போல ஒரு பிரமை.

நான் என் கையிலிருந்த மந்திரக் கோப்பையை எடுத்தேன். அதிலிருந்த திரவத்தை எடுத்து தெளித்தேன். செடிகள் அசுர வளர்ச்சியடைந்தன. எதிரே இருப்பவர்களின் சுவாரஸ்யங்களை அறிந்து அந்த ஏரியாக்களில் உயர்வு நவிர்ச்சி அணியைப் புகுத்தினேன். மற்ற இடங்களைத் தவிர்த்தேன். சரளமாக நான் சொல்லிக் கொண்டிருந்த ஃபேரி டேல் கலந்த பிரசன்டேஷனைப் பார்த்து தூரத்தில் அமர்ந்திருந்த மேனேஜர் பிரமித்துப் போய்விட்டார். நான் தொடர்ந்தேன்… தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

எனக்கு எதிரே அமர்ந்து உதட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

எனி கொஸ்டின்ஸ் ? என்றேன், புன்னகை மாறாமல்.

சேவியர்

3,180 total views, 6 views today

1 thought on “கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *