இந்த ஆமதுருகளை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இச்சபைக்கு இவர்கள் வேண்டாம்!!!

மனோ.கணேசன்-பா.உ.இலங்கை

“இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை அதன் பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார்.”

“இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தான். இன்றுள்ள எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள். சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார்.” “அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத் துக்கு எதிராக போராடினோம். Extra judicial killings, enforced abductions களுக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள்.”

“இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. “

“முதல் அரசியல் கொலையை,1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பௌத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார்.அதன்பின் பௌத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.” “இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.”

“நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாயல்களுக்கும், பாதிரிகளை தேவாலயங்களுக்கும் போக சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்”

“இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.” “இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்கு போய் கேட்கலாம். இங்கே வேண்டாம்”.
“கடந்த தேர்தலின் போது ஒரு கேலிகூத்து நடந்தது. களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாக பிளந்ததாம். ‘டோம்’ என சத்தம் வந்ததாம். பாதாளத்தில் இருந்து நாகராஜன் வந்தாராம். ‘நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்’ என ஒரு அசரீதி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!

சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம்.” (சிங்கள மொழியில் இன்னும் சொன்னேன். ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கைதட்டி ஆமோதித்து கேட்டார்கள்.

789 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *