இலங்கையில் சிலைகளும் அரசியலும்

இலங்கையில் இருந்து ஆர்.பாரதி

திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் யாழ்ப்பாணத்தை இப்போது பரபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் சிலைகள் இடித்துத் தகர்க்கப்படுவதும், மறுபுறம் சிலைகள் வைக்கப்படுவதும் அண்மைக் காலத்தில் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றது. குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பை யாருடைய ஆளுகைக்குட்பட்டது என்பதை உறுதிப் படுத்துவதற்கான தொல்லியல் ஆதாரங்களில் ஒன்றாக சிலைகள் கருதப்படுகின்றது. இந்தப்பின்னணியில்தான் சிலைகள் தகர்க்கப்படுவதும் புதிய சிலைகள் இரவோடிரவாக வருவதும் இடம்பெறுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரம் கடந்த மாதம் இனந்தெரியாத குழு ஒன்றினால் தகர்க்கப்பட்டது. இந்தப்பகுதிக்கு உரிமை கொண்டாடக்கூடியவர்கள் யார் என்பது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையிலேயே இந்த விக்கிரம் தகர்க்கப்பட்டிருக்கின்றது. தொல்லியல் பகுதியாக அடையாளம் காணப்பட்ட இந்தப்பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதோ அல்லது நீக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. முல்லைத்தீவில் குருந்தூர்மலைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து வெடுக்குநாறிமலை இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழர் தாயகப்பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான போரை மற்றொரு வடிவத்தில் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. முன்னர் படையினர் போரை நேரடியாக முன்னெடுத்தார்கள். இப்போது அரசாங்கத்தின் இயந்திரங்களான திணைக்களங்கள் இந்தப் போரை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கின்றன. இதில் தொல்லியல் திணைக்களம் முக்கியமானது. அதனைவிட வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றனவும் குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அங்கிருந்து தமிழரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

இதில் தொல்லியல் திணைக்களம் முற்றுமுழுiதாக சிங்கள புத்திஜீவிகளையே உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதற்கு இரண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் உள்வாங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த போதிலும், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இனவாத அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் செயற்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவே இந்ச் செய்தியை திட்டமிட்ட முறையில் அரசாங்கம் வெளியிட்டதாகக் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தீவுப் பகுதிகளை மையப்படுத்தியதாக தொல்லியல் திணைக் களத்தின் செயற்பாடுகள் அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. நயினாதீவைப் பொறுத்தவரையில் அதன் பழமையும் பெருமையும் அனைவருக்கும் தெரியும். ஆனால்,அங்கு அமைக்கப்பட்ட பௌத்த விகாரையைத்தான் முக்கியமானதாகக் கூகுள் வரைபடத்தில் காட்டிக்கொள்வதற்கான உபாயங்களையும் அரசாங்கம் வகுத்துச் செயற்படுகின்றது. கச்சதீவில் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பாரிய புத்தர் சிலையில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை சிங்கள பௌத்த அடையாளமாகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப்பின்னணியில் சைவத் தமிழர்கள் இப்போது எதிர்வினையாற்றத் தொடங்கியிருப்பதுதான் அரச தரப்பையும் சிங்கள – பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் திணைக்களங்களையும் சங்கடத்துக்குள்ளாக்கியிருக்கின்றது. அவர்கள் இலக்கு சைக்கும் பல இடங்களில் நடராஜர், சிவன், சிவலிங்கம் என சிலைகள் வைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பகுதிகள் தமது ஆளுகைக்குட்பட்டவை என்பதைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு உபாயமாக இதனை அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். அதாவது இருப்பைப் பாதுகாப்பதற்கு இவ்வாறு செய்ய வேண்டியிருக்கின்றது.

இதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினை நாகபூசணி அம்மனைப் பிரதிபலிக்கும் சிலை. நயினாதீவு உட்பட அனைத்துத் தீவுகளுக்கும் செல்வதற்கான ஒரே நுளைவாயிலாக இருப்பது பண்ணைப் பகுதிதான். தீவுப் பகுதிக்குச் செல்பவர்கள் மனதில் நாகபூசணி அம்மன் பதிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சிலை அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது புத்தர் சிலை ஒன்று அங்கு வைக்கப்படலாம் என்பதால், அதனை முந்திக்கொண்ட செயற்பாடமாகவும் இருக்கலாம்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் இந்தச் சிலை பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கம்பீரமாகக் காணப்பட்டபோது,அது இந்தளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இந்த சிலையை அமைத்தது யார் என்பது இன்றுவரை தெரியவில்லை. ஆனால், அது திடீரென அமைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது அந்தச் சிலையைப் பார்க்கும்போது தெரிகின்றது. மிகவும் நேர்த்தியாக – சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் அந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சிலை அமைக்கப்பட்ட பின்னர் உருத்திரசேனை என்ற அமைப்பினர் அதற்கு பாலாபிஷேகம் செய்யப்போய் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார்கள். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர். அந்த சிலையை செய்தது யார் என்பதோ அல்லது அங்கு கொண்டுவந்து வைத்தது யார் என்பதோ தமக்குத் தெரியாது எனத் தெரிவித்த உருத்திரசேனை அமைப்பினர், பாலாபிஷேத்தை மட்டுமே தாம் செய்ததாகக் கூறியிருக்கின்றார்கள்.
இந்த சிலையை அகற்றுவதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அவர்கள் பெற்றார்கள். கடந்த செவ்வாய்கிழமை இந்த வழக்கு யாழ். நீதிமன்றத்துக்கு வந்தபோது, மே மாதம் 4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், என். சிறீகாந்தா உள்பட 15 வரையான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். முறைப்பாட்டாளர் இன்றி பொலிஸார் இந்த வழக்கை தொடுக்க உரிமை இல்லை என்ற கருத்தை சட்டத்தரணி சுமந்திரன் முன்வைத்து வாதத்தை தொடக்கினார்.

தொலைபேசி மூலம் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் வன்முறைகள் ஏதும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தே தாம் வழக்கு தொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள், சுமந்திரன், சிறீகாந்தா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். சிலை வைக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால்,அதற்கு உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்வரும் மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்தவிவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயற்பட்டிருந்தமை மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. இந்து அமைப்புக்களும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன்தான் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்கள்.

பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அம்மன் சிலை குறித்து புதிய வரலாற்றுத் தகவல் ஒன்றை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்திதானந்தம் தெரிவித்திருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பது இதுதான் –

“யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்த அருள்மிகு நாகபூசணித் திருவுருவம் வரலாற்றுச் சிறப்புடைது. மகாவம்சம் கூறும் மகோதரனும்

குலோதரனும் அவன் முன்னோரும் வழிபட்டது. அத்திருவுருவத்தை முதலில் அழித்தவர் போர்த்துக்கேயக் கத்தோலிக்கர். ஒல்லாந்தர் காலத்திலும் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைக்க வில்லை. ஆங்கிலேயர் காலத்தில் பண்ணையில் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைத்தனர். மகாவம்சம் கூறும் நாக மன்னர்களான மகோதரனும் குலோதரனும் முன்னோரும் வழிபட்ட திருவுருவத்தையே மீளமைத்தனர்.

பண்ணைப் பாலம் கட்ட முன்பு,படகில் மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு,நயினாதீவு செல்வோர் பண்ணைக் கடலைக் கடந்தனர். அருள்மிகு நாகபூசணி திருவுருவத்தை வணங்கியே – வழிபட்டே படகுகளில் ஏறினர். அங்கிருந்து படகுகளில் வந்து கரையிறங்கி யாழ்ப்பாணம் செல்வோரும் வணங்கி வழிபட்டு மாநகர் புக்கனர்.”

இவ்வாறு மறவன்புலவு சச்சி சொல்லியிருக்கின்றார். அரச திணைக்களங்கள் முன்னெடுக்கும் பௌத்த – சிங்கள மயமாக்கலுக்கு எதிர்வினையாற்றுவதற்கு தமிழர்களும் தயாராகிவிட்டார்கள் என்பதைத்தான் இவை உணர்த்து கின்றனவா?

456 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *