கண்டறியாத காதலன்

அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள் மூலமே.

முதலில் அவனது பேரைக்கேட்டாள். அடுத்து அவனது தோற்றம் பற்றிக்கேட்டாள். பின்னர் அவனிருக்கும் ஊர்பற்றிக் கேட்டறிந்தாள். அவற்றையெல்லாம் கேட்டபின்னர் அவன்மீது கொண்ட தீவிரமான காதலினால் பித்துப்பிடித்தவள் போலானாள்.

அன்னையையும் தந்தையையும் அன்றே விட்டுச் சென்றாள். அவள் வாழ்ந்த ஊரார் ஆண்டாண்டு காலமாகப் பேணிவந்த கட்டுப்பாட்டை மீறினாள். (ஒரு ஆண் தான் விரும்பும் பெண்ணைத் தேடிச் செல்லலாம், ஆனால் ஒரு பெண் ஆணைத் தேடிச் செல்லக்கூடாது என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு) காதலினால் தன்னை மறந்தாள், தன் பெயரைக் கெடுத்துக்கொண்டாள். காதலனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள்.

இத்தனைக்கும் அவள் அவனைப்பற்றி என்னதான் கேட்டறிந்திருப்பாள்? அவனுக்கு என்று ஒரு பெயர் கிடையாது. ஓர் உருவம் கிடையாது. பிச்சைக்காரக் கோலத்திலும் அவன் இருப்பான். சுடுகாட்டிலும் வாழ்ந்திருப்பான். இவற்றைத்தானே அவள் கேள்விப்பட்டிருத்தல் கூடும்.

இவற்றையெல்லாம் கேட்டபின்னரும்கூட அவன்மேல் தீராத குhதல்கொண்டாள். ஆம். “பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்.” இருந்தும் அவளையும் அவனையும் அறிந்தவர்கள் அவளைத் திட்டவில்லை. மாறாக அவள் காதலைப் போற்றிப் பாடினார்கள்.

அப்பாடலைக் கோயிலில், அவள் தலைவன், அந்த இறைவன் முன்னிலையில் பாடி மகிழ்ந்தார்கள். முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

அப்பர் சுவாமிகள் பாடிய இக் காதல் கதையினால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன் தானும் அக்காதலை இக்காலத்தவரும் கேட்டு மகிழத் தனது இனிய தமிழில் பாடிவைத்தார்.
அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
அடுத்தநாள் அவனுடைய ஊரைக்கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் – அவன்
என்னைத்தேடி வரும்வரையில் விடவும் மாட்டேன்

அந்தக் காதலி அவனைத் தேடிச் சென்றாள். இந்தக் காதலியோ அவன் தன்னைத் தேடிவருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றாள்.

The lover who never showed up Once she asked about his name Then she learned about his appearance
Later she inquired about his country Yet,* she fell madly in love with him.

She deserted her mother and father She freed herself from the restraint imposed by age old customsShe forgot who she was and lost consciousness of her reputation She surrendered to the feet of her lover

*The saint says “yet” because what the girl could have learned about that person is that he had no name, no specific countryto claim as his own, dresses in anattire of a beggar and spends his timealone on cremation ground (at the end ofthe universe).

This story about the devotion of a young girl to Lord Siva was sung in one of his hymns by the Saiva saint Appar. Poet Kannadasan was so impressed by this wonderful story he adopted the hymn to compose his own poem to express the unbound love of a young girl towards her hero.

One day I learned his name
The next day I asked about his country
Until now I have not seen his face, yet
I will not let him go until he comes
looking for me.

நன்றி.தமிழர்தகவல்.

— கலாநிதி பால.சிவகடாட்சம்.

534 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *