திடீரென மயங்கி விழுதல்

பாடசாலையில் காலை வழிபாட்டு நேரம். ஆசிரியர் திருவாசகத்தில் திளைத்து தன்னை மறந்து நேரம்போவது தெரியாது பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி பொத்தென விழுந்துவிட்டாள்.

அதேபோல இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவதும் உண்டு. படுக்கையிலிருந்து திடீரென எழும்போது மயங்குதல், திடீரெனத் திரும்பிப் பார்க்கையில் விழுதல், சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்காக கழுத்தை நிமிர்த்தியபோது திடீரென விழுதல் போன்ற பல்வேறு உதாரணங்களையும் குறிப்பிடலாம்.

திடீர் மயக்கங்கள்

இவை எல்லாம் திடீர் மயக்கங்கள். மயங்கி விழுந்த வேகத்திலேயே மயக்கம் தெளிந்துவிடுவார்கள். இத்தகைய மயக்கம் தீவிரமான நோய்களின் அறிகுறிகள் அல்ல. பக்கவாதமோ வலிப்பு நோயோ அல்ல. மருத்துவத்தில் ளலnஉழிந எனச் சொல்லப்படும் இவை கணநேரம் மூளைக்கச் செல்லும் ஒட்சிசன் குறைவதால் ஏற்படுவதாகும். டீடயஉம ழரவ எனப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

‘இருட்டிக் கொண்டு வந்தது’, ‘என்ன நடந்தது எனத் தெரியாது திடீரென விழுந்துவிட்டேன்’ என எம்மவர்கள் சொல்லுவார்கள். திடீர் மயக்கம் என நாம் சொல்லலாம்.

இத் திடீர் மயக்கங்கள் பெரும்பாலும் எதிர்பாராது வரும். சிலருக்கு வியர்த்துக்கொண்டோ அல்லது வாந்தியுடன் வரலாம். சில கணங்களுக்குள் விழுந்தவர் தானே விழித்து எழுந்து விடுவார். இவர்களில் பெரும்பாலனர்கள் மற்றவர்களின் எந்த உதவியும் இன்றி தாமாகவே எழுந்து தமது அலுவலைத் தொடரக் கூடியதாக இருக்கும்.

பொதுவான சனத்தொகையில் பத்தில் நான்கு பேருக்கு இத்தகைய மயக்கம் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள். இவ்வாறன மயக்கம் ஒருவருக்கு 40 வயதிற்கு முற்பட்ட காலத்திலேயே முதன்முறையாக வரும். 40 வயதிற்கு பின்னர்தான் முதன் முறையாக ஒருவருக்கு இப் பிரச்சனை ஏற்படுகிறது எனில் அது சற்று தீவிரமான நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். பெரும்பாலும் பதின்ம வயதுகளிலேயே முதல் முதலாக வருகிறது. பையன்களை விட பெண் பிள்ளைகளில் வருவது அதிகம்.

காரணங்கள் எவை

பெரும்பாலன இத்தகைய மயங்கங்கள் நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டவையே (neurally mediated syncope -NMS) கடுமையான வலி, மன அழுத்தம், பயம், தீவிர உடற் பயிற்சியின் போன்றவற்றின் போது நிகழ்கின்றன. கடுமையான வாந்தியின்போதும் வருவதுண்டு.

பொதுவாக முகம் வெளிறுவதுடன் வியர்வையும் சேர்ந்து வரலாம். பெரும்பாலவனர்களுக்கு அந்நேரத்திலும் கண்கள் திறந்து இருக்கும். மருத்துவ மாணவன் மயங்கி விழுந்ததற்குக் காரணம் முதன் முறையாக இரத்தம் வெளியேறுவதைக் கண்ட அதிர்ச்சியே ஆகும். அதே மாணவன் பின்னர் திறமையான சத்திரசிகிச்சை நிபுணராக புகழ் பெற்றது ஆச்சரியமான விடயமல்ல. மற்றொரு முக்கிய காரணம் திடீரென ஒருவரின் இரத்த அழுத்தம் குறைவதால் ஆகும். படுக்கை நிலையில் இருந்து எழுந்திருக்கும்போது அல்லது உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நிற்கும்போது திடீரென ஒருவரது இரத்த அழுத்தம் குறைவதுண்டு.

இதை நிலை சார்ந்த குறை இரத்த அழுத்தம் (Postural hypotension) என்பர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் கால்களை அசைக்காது நிற்கும்போதும் இரத்த ஓட்டம் குறைவடைவதால் அவ்வாறு இரத்த அழுத்தம் குறையக் கூடும். பாடசாலை மாணவி விழுந்தது அவ்வாறே ஆகும்.

வயதானவர்களில் இவ்வாறு நிலை சார்ந்த குறை இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல மருந்துகள் காரணமாக இருப்பதுண்டு.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் Prazosin, HCT, Atenolol, propranolol போன்றவை முக்கியமானவை. அதே போல மனச் சோர்விற்க்கு உபயோகிக்கும் doxepin, imipramine, Amitriptyline போன்றவையும். ஆண்குறி விறைப்படைதலை ஊக்குவிக்கும் Sildenafil > tadalafil மருந்துகளும் நிலை சார்ந்த குறை இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதால் சில தருணங்களில் திடீர் மயக்கத்தைக் கொண்டுவருவதுண்டு.

மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது மூச்சை அடக்குவதால் இவ்வாறான மயக்கம் நேரலாம்.கடுமையான காய்ச்சல், கடுமையான வயிற்றோட்டம் போன்ற நோய்களால் உடலின் நீர்த்தன்மை குறைவதாலும் மயக்கம் ஏற்படுவதைக் காண்கிறோம். குக்கல் போன்ற கடுமையான இருமலின் போது, மூச்சு விடமுடியாது இரத்தத்தில் ஒட்சசிசன் அளவு குறைவதாலும் ஏற்படுவதுண்டு. கடுமையான வரட்சியால் வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போதும் இந்நிலை ஏற்படலாம்.
தீவிரமான வேறு நோய்கள்

சற்று தீவிரமான வேறு நோய்களாலும் இவ்வாறான மயக்கங்கள் ஏற்படலாம். முக்கியமானது வலிப்பு நோயாகும். இதன்போது பொதுவாக மயக்கம் மட்டுமின்றி கை கால்களை இழுப்பதும் நடக்கும். ஆனால் அவ்வாறான இழுப்பு இல்லாத வலிப்புகளும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போதும் மயக்கம் ஏற்படுவதுண்டு. இது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம். அவர்கள் விரதங்கள் இருப்பதாலும் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.

திடீரென ஏற்படும் அதிகமான இரத்தப் பெருக்கு மற்றொரு காரணமாகும். உதாரணமாக காயத்தினால் கடுமையாக குருதி வெளியேறுவது, கடுமையான மாதவிடாய் பெருக்கு, மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல் மற்றும் வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும் குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம். உதாரணமாக- குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பலவாகும்.

எனவே காரணம் எதுவாக இருந்தாலும் திடீர் மயக்கம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் அது ஆபத்தான நோயின் வெளிப்பாடு அல்ல என்பதை நிச்சயத்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் என நீங்கள் சந்தேகித்தால் அவரிடம் மறக்காமல் சொல்லுங்கள். மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.

மருத்துவம்
சாதாரண மயக்கங்கள் தாமாகவே குணமாகிவிடும் என்பதை அறிந்தோம். மயக்கங்களுக்கு வேறு காரணங்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய மருத்துவர் வழி கூறுவார்.

மயக்கம் வருவது போலிருந்தால் என்ன செய்யலாம்.
நிற்கவோ இருக்கவோ செய்யாது உடனடியாக அந்த இடத்திலேயே படுங்கள். முடியுமானால் கால்களை ஒரு நாற்காலியில் உயர்த்தி வையுங்கள். மயக்கம் தெளிந்தாலும் உடனடியாக திடீரென எழுந்து நிற்காதீர்கள். சற்று தலையை உயர்த்தி உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருந்தால் மட்டும் எழுந்திருங்கள். போதிய நீராகாரம் எடுப்பதும், மதுபானத்தைத் தவிர்பதும், காலுக்கு ஸ்டொகிங் அணிவதும், இதைத் தடுப்பதற்கு உதவும்.

1,393 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *