ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் பெற்றோர் நினைப்பு குறையுமா கூடுமா?

-ரஜினா தர்மரட்ணம்.யேர்மனி.
அன்பு,பாசம்,காதல் என்றுமே குறையாத உணர்வு. ஆனால் பெற்றோரின் நினைப்பு திருமணம் ஆன புதிதில் குறைய வாய்ப்புகள் உண்டு. கணவனின் அக்கறை, காதல் மற்றும் அவரின் நினைப்பு மேலோங்கி இருப்பதனால் பெற்றோரின் நினைப்பு அச்சமயத்தில் குறைந்துவிடும். கணவருக்குப் பிடித்த உணவுகளைச் செய்ய வேண்டும் என்கிற நினைப்பு இருக்கும். அவருக்குப் பிடித்ததைச் செய்யத் தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோருடன் தொடர்பு குறைந்து விடும். நிறைய நேரம் கணவனுடன் கழித்து விடுவார்கள்.
ஆனால் எமக்காக எவ்வளவு செய்த எங்கள் அம்மா அப்பா நினைப்பு குறையுமா? இல்லை! குறையக்கூடாது. சுயநலம் இல்லா அன்பு உள்ளவர்கள் பெற்றோர்கள். அவர்களை விட்டுக்கொடுக்கவும் கூடாது விடவும் கூடாது.
திருமணத்துக்கு முன் அம்மா கூடுதலான வீட்டு வேலைகளைச் செய்வார். ஆனால் திருமணத்துக்குப் பின் அம்மாவா வந்து எங்கள் வீட்டில் செய்யமுடியும்? அப்பொழுது அம்மா பட்ட கஷ்ரம் நினைப்புக்கு வரும். உடல்நலம் குறைவாக இருக்கும்போது அம்மாவும் அப்பாவும் அக்கறை காட்டியது மறக்கமுடியுமா? பெற்றோரைப் பிரிந்து இருக்கும் பொழுது தான் அவர்களின் அன்பு அதிகமாகப் புரிகிறது. ஒன்றாக இருக்கும் போது தெரியாது, பிரிந்து வந்த பின் அவர்களின் அருமை தெரிகிறது.
எங்களுக்கு பிள்ளைகள் பிறந்தபின்பு தான், எங்கள் பெற்றோர்கள் பட்ட கஷ்ரங்களை முழுமையாக உணரமுடிகிறது. அவர்கள் மேல் இருக்கும் பாசம் மேலும் அதிகரிக்கும். ஒரு தாயாக ஆன பின்னே தான் ஒரு பெண்ணுக்கு தன் தாயின் தியாகம் புரியும். திருமணத்துக்குப் பின்னரே அதனால் பெற்றோரின் பாசத்தை உணரமுடிகிறது.
அவர்களை நாம் சிலசமயங்களில் வேதனை படித்தியுள்ளோம். அவற்றை நினைக்கும்போது மனதுக்கு வலிக்கிறது.
பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நாங்கள், ஒருபோதும் திருமணத்துக்குப் பின் அவர்களை கைவிடக்கூடாது. திருமணத்துக்குப் பின் கணவரே தாயும் தந்தையுமாக இருக்கிறார். இவ்வன்பினாலே தான் பெண்களால் பிறந்தவீட்டை விட்டு புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
966 total views, 8 views today