தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை தேசியக்கவிஞராக கொண்டாடி மகிழ்ந்தனர்.

03.12.2023 தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா நிகழ்வு யேர்மனி டோட்மூன்ட் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு, பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.

இரவீந்திரன் (இயக்குநர்.ஐரோப்பிய தமிழ் வானொலி,ஆசிரியர் அகரம் சஞ்சிகை.) தலைமையில் தொடர்ந்த நிகழ்சியில் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல்கள், கவிதைகள் பற்றிய உரைகள் தொடர்ந்தன. ஏலையா முருகதாசன், நேசக்கரம் சாந்தி, பன்னாட்டு புலம்பெயர் படைப்பாளர் சங்கத் தலைவர் சபேசன், பாடகர் செங்கதிர், துளசிச் செல்வன், அறிவிப்பாளர் முல்லை மோகன், போன்றவர்கள் உரையாற்றினார்.

இசைப் பறவை கரோலின், ஐவரி அகஸ்ரின்,ஜெயன் ஆகியோர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல்களைப் பாடினார்கள். துளசிச் செல்வன் தனது உரையில் இதுவரை தாயகக் கவிஞராக கொண்டாடப்பட்ட புதுவை இரத்தினதுரை அவர்களைத் தேசியக் கவிஞராக மதிப்பளித்து கொண்டாடவேண்டுமென கருத்துரைத்தார். கவிஞர்கள், கலைஞர்கள்,அறிவாளிகள் நிறைந்திருந்த அரங்கம் கைகள் தட்டி ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்த நிகழ்சியில் புதுவை இரத்தினதுரை அவர்கள் தேசியக் கவிஞர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அரங்கில் அனைவரது கருத்துக்களுக்கும் நேரமளித்தபின்னர் பன்னாட்டு புலம்பெயர் படைப்பாளர் சங்கத் தலைவர் சபேசன் புதுவை இரத்தினதுரை அவர்களை தேசியக் கவிஞராக இந்த மன்றம் அறிவிக்கின்றது என்றும் அவரது படைப்புகள் எங்கும் பரவி தலைமுறை கடந்து வாழவேண்டுமென்றும் தெரிவித்தார்.

468 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *